ஒரு ஆத்மாவின்
பயணம்
பாகம்-9
என்னோட ஆண்டு
நிறைவுல உங்களையெல்லாம் பார்த்தது!
அந்த சமயத்துல, என்னோட ரெண்டு காதையும் குத்தினதால எனக்கு வலி அதிகமா இருந்துச்சா,
அதுல எனக்கு ஒரு முக்கியமான விஷயத்தை உங்ககிட்ட சொல்றதுக்கு விட்டுப்
போயிடுச்சு!
எனக்கு அந்த
நிகழ்ச்சி ஆரம்பிக்கறதுக்கு முன்னால ஒருத்தர் வீட்டுக்கு வந்தார். அவர் வரணுங்கிறதுக்காக வீட்ல எல்லாரும் காத்துக்கிட்டிருந்தாங்க. அவர் வந்தவுடனே, என்னோட அப்பா என்னைத் தூக்கிக்கிட்டு
வீட்டுக்கு வெளியில இருக்கற திண்ணைல் உட்கார்ந்துகிட்டார். எல்லாரும்
பையனோட மாமாவ கூப்பிடுங்க, கூப்பிடுங்கன்னு சொல்ல, என்னோட மாமாவும் ஓடி வந்தார்.
வந்து என்னை
அப்பாகிட்டேர்ந்து வாங்கி,
தன்னோட மடில வெச்சுக்கிட்டார். என்னை ஏதோ செய்யப்
போறாங்கன்னு தோணிச்சு. நான் நினைச்ச மாதிரியே, அந்த புதுசா வந்தவர் மாமாகிட்ட தலையை ஆட்டாம புடிச்சுக்குங்க அப்படின்னு சொல்லிட்டு,
என்னோட தலைல தண்ணிய நல்லா தெளிச்சார். எதுக்கு
தெளிக்கறார்னு எனக்குப் புரியலை. உடனே தன்கிட்டே இருந்த பெட்டிலேர்ந்து
எதையோ எடுத்தார். அதால என்னோட தலைல சரக், சரக்னு அழுத்தி இழுத்தார். எனக்கு என்னவோ பயமா இருந்தது.
தலையை இப்படி அப்படி ஆட்டி அழ ஆரம்பிச்சேன். உடனே
என் கைல ஒரு பொம்மையை குடுத்தாங்க. நான் அதுல கவனமா இருக்கற நேரமா
பார்த்து, வந்தவர் தன்னோட சரக் சரக் வேலையை திரும்ப ஆரம்பிச்சார்.
என்னோட தலைலேர்ந்து பொலபொலன்னு என்னவோ என் மேலயும், கால்லயும் விழுந்தது. அது என்னோட தலைமுடின்னு மத்தவங்க
பேசிகிட்டதிலிருந்து தெரிஞ்சது. அப்புறம் என்னை குளிக்க வெச்சாங்க.
எனக்கு என்ன நடந்ததுன்னு மத்தவங்க பேசறதை கவனிச்சு பார்த்ததுல,
எனக்கு மொட்டை அடிச்சிருக்காங்கன்னு தெரிஞ்சது.
இந்த ஒரு விஷயம்தான்
எனக்கு அப்போ சொல்ல விட்டுப் போச்சு.
எனக்கு இப்ப
வாய்க்குள்ள என்னவோ குறுகுறுன்னு குத்துதுன்னு சொன்னேனில்லையா? நான் என்னோட வாய்க்குள்ள என் கையை வெச்சு பார்த்தப்ப, கீழேயும் மேலேயுமா ஏதோ புதுசா வந்திருக்குன்னு தெரிஞ்சது. முன்னெல்லாம் என்னோட கையை வாய்ல வெச்சு கடிக்கும்போது மெத்து மெத்துன்னு இருக்கும்.
ஆனா இப்ப விரல்ல நறுக்கு நறுக்குனு குத்துது! அது
எனக்கு புதுசா இருந்தது. அதனால, என் விரல்
மட்டுமில்லை, கைல எது கிடைச்சாலும் வாய்ல வெச்சு கடிச்சுப் பார்க்கறது
எனக்கு இப்ப விளையாட்டா ஆயிடுச்சு! அதுவும், எனக்கு ரொம்ப புடிச்சது, அம்மா என்னை தூக்கி வெச்சிருக்கும்போது,
அவங்க கழுத்துகிட்ட கை ஆரம்பிக்குமே! அங்க கடிக்கிறது
ரொம்ப புடிச்சிருக்கு! அப்படி கடிக்கும்போது அம்மா, “டேய், வலிக்குதுடா!” அப்படின்னு
சொன்னாலும், நான் விடறதில்லை. அம்மாவும்
ஒண்ணும் சொல்றதில்லை. அதே மாதிரி அப்பாவை அவரோட முகத்தில் கடிக்கிறதும்
எனக்கு விளையாட்டு! கொஞ்ச கொஞ்சமா நாள் ஆக ஆக, என் வாய் முழுக்க புதுசு புதுசா நிறைய வர ஆரம்பிச்சது. என்னைப் பாக்கறவங்க எல்லாரும், “அடடே! குழந்தைக்கு பல் முளைக்க ஆரம்பிச்சுடுச்சே!” அப்படின்னாங்க.
அப்படி பல்
வளரும்போது என்னால பேச முடிகிறது. ம்ம்ம்மாங்கிறது அம்மா, ப்ப்ப்பாங்கிறது அப்பா இப்படி நிறைய முடிகிறது. எனக்கு
ஏதாவது வேணும்னா, அதை என் கையால் காட்டி, “ஊம், ஊம்” அப்படின்னு சொல்வேன்.
ஏன்னா, எனக்கு எது வேணுமோ, அதோட பெயர் எனக்குத் தெரியாதே! அதோட பெயர் தெரியும்வரை
எல்லாமே எனக்கு “ஊம் ஊம்”தான்!
இப்போதெல்லாம்
என்னால் கால்களால் மெதுவா மட்டுமில்லை, வேகமாகவும் நகர முடிகிறது.
மெதுவா நகர்ந்தால் நடக்கறேன், வேகமா நகர்ந்தா ஓடறேன்
அப்படின்னு சொல்றாங்க! ஆக, நடக்கறது,
ஓடறது இந்த ரெண்டும் இப்ப எனக்கு புதுசு! நான்
இப்படி ஓடறதைப் பார்த்துட்டு மத்தவங்க “குழந்தைக்கு கால் முளைச்சுடுத்து,
கவனமா பாத்துக்கணும்” அப்படின்னாங்க. எனக்குப் புரியலை! நான் இருட்டுல இருந்தப்பவே எனக்கு
கால் முளைச்சிடுச்சே! அதனாலதான நான் அங்கே உதைச்சுகிட்டிருந்தேன்?
என்னவோ, இப்பதான் கால் முளைச்சிடுச்சுன்னு சொல்றாங்க!
ம்ம்ம்! அவங்களுக்கு புரிஞ்சது அவ்வளவுதான்!
இப்ப எனக்கு
இந்த புது விளையாட்டை நான் விளையாடணும். உங்களோட அப்புறமா
பேசறேன்! சரியா?
ஆத்மாவின் பயணம் தொடரும்!
No comments:
Post a Comment