Sunday, April 28, 2019

ஒரு ஆத்மாவின் பயணம்


பாகம்-14

என்னோட அத்தை ரெண்டு பேரும் வந்து பாத்துட்டு போன மறுநாள் கார்த்தால வழக்கமான ஸ்லோக ஒலி, ஊதுவத்தி வாசனை, எல்லாரும் பரபரன்னு வேலை. ஆனால் என்னால வழக்கம்போல எந்திரிக்க முடியலை. உடம்பெல்லாம் வலிக்குது. கண்ணு எரியுது. கூடவே வெயில்ல நிக்கற மாதிரி உடம்பெல்லாம் சூடா இருக்கு. என்னன்னு தெரியலை.

அம்மா வந்து தொட்டு பாத்துட்டு, “என்னது! குழந்தைக்கு ஜுரம் மாதிரி இருக்கே!” அப்படின்னு சொல்லிட்டு என்ன, இப்படி அனலா அடிக்கறதே! எப்படி திடீர்னு! தெரியலையே!” என்றபடி பாட்டி, அப்பா, தாத்தாகிட்ட விஷயத்தை சொல்லப் போனா. அப்பதான் எனக்கு உவ்வா காச்சல் வந்திருக்குன்னு தெரிஞ்சுது. என்னால கண்ணு திறக்க முடியலை. ஹ்ம், ஹ்ம்னு முனகிட்டே இருந்தேன். அப்பப்ப நாக்கு, தொண்டையெல்லாம் காஞ்சு போயிடுது.

இந்த மாதிரி ரெண்டு மூணு தடவை நான் இன்னும் சின்ன பாப்பாவா இருக்கும்போது வந்திருக்காம். அம்மா பேசிட்டிருந்தா. ஆனா எனக்கு அதெல்லாம் ஞாபகமில்லை. என்னவோ, இப்பதான் முதல் தடவையா வந்த மாதிரி இருக்கு. இது எனக்கு புதுசா இருக்கு.

எனக்கு இப்படி வந்திருக்குன்னு தெரிஞ்சுகிட்டு, பக்கத்து வீட்டிலிருந்தெல்லாம் வந்து பாத்தாங்க. ஒண்ணு ரெண்டு பேர், இது த்ருஷ்டியா இருக்கும், சுத்திப் போடுங்கன்னு சொல்லிட்டிருந்தாங்க. அது என்னன்னு தெரியலை. பாட்டியும், இன்னிக்கு ஞாயிற்றுக் கிழமயா இருக்கு. இன்னிக்கு சாயந்திரம் சுத்திப் போடலாம்னு சொன்னா. என்ன பண்ணுவான்னு தெரியலை.

இந்த உவ்வா காச்சம் வந்ததால, என்னால இன்னிக்கு விளையாட முடியாது! என்ன செய்யறதுன்னு தெரியலை. அம்மாவும் பாட்டியும் நான் வழக்கமா சாப்டறதை தராம, வேற என்னவோ குடுத்தாங்க. ஆனா என்னால முழுசா சாப்பிட முடியலை. அதனால ரொம்ப அயர்ச்சியா இருக்கு. எனக்கு எதனால இப்படி வந்துச்சுன்னு தெரியலை. இப்படி இனி திரும்ப திரும்ப வருமா? தெரியலை. நாள் பூரா படுத்துகிட்டே இருந்தேன். அயர்ச்சி அதிகமா இருக்கறதால தூங்கிட்டே இருந்தேன். சாயந்திரமா பாட்டி கைல உப்பு மிளகா ரெண்டையும் எடுத்துகிட்டு வந்து, என்னை அம்மா மடிலஇப்படி கிழக்கு பார்த்து உட்காருன்னு அம்மாவைப் பார்த்து சொல்லிட்டு, இப்படி மூணு தடவை, அப்படி மூணு தடவை சுத்தினா. அப்படி சுத்தும்போது என்னவோ முணுமுணுன்னு சொல்லிட்டே சுத்தினா. என்ன சொன்னான்னு தெரியலை. சுத்தி முடிச்சுட்டு, அம்மாவைப் பார்த்து, “கொஞ்சம் நகர்ந்து உட்காருன்னு சொல்லிட்டு, சமையலறைக்கு போய் எரிஞ்சிகிட்டிருக்கற அடுப்புல உப்பு மிளகா ரெண்டையும் போட்டா. அது ரெண்டும் படபடன்னு வெடிச்சுது. பாட்டி அதைப் பார்த்துட்டு, “பக்கத்து வீட்டு அம்புஜம் சொன்னது சரிதான், குழந்தைக்கு ரொம்ப த்ருஷ்டின்னா!

அதுக்கப்புறம் அம்மா என்னைத் தூக்கி வெச்சுகிட்டு, பாட்டிகிட்டஅம்மா! நான் டாக்டரைப் பார்த்துட்டு வரேன்னு சொன்னா. டாக்டர்னா? இந்த ஊசியெல்லாம் போடுவாங்களே! அங்கேயா! எனக்கு லேசா பயமா இருந்துச்சு. அங்கே போனா, என்னை மாதிரியே நிறைய பேர் வந்திருந்தாங்க. அப்படியே சுத்தி எல்லாரையும் பார்த்தேன். அவங்கள்ள ஒரு பெரியக்கா உட்கார்ந்திருந்தாங்க. அவங்களை எனக்கு நல்லா தெரியும். ரொம்ப நாள் முன்னால அவங்களுக்கு டும்மடக்கா கல்யாணம் நடந்துச்சு. அதுக்கப்புறம் இப்பதான் பாக்கறேன். ஆனா, இப்ப அவங்களுக்கு தொப்பா ரொம்ப பெரிசா இருக்கு! இதுக்கு முன்னாடி இப்படி இல்லை. அம்மாகிட்ட அவங்களைக் காட்டி, “அம்மா, அந்தக்கா தொப்பா ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு? நெறைய மம்மு சாப்டுட்டாங்களா?” என்று கேட்டேன். அம்மா சிரிச்சுகிட்டே, அக்கா தொப்பாக்குள்ள ஒரு குட்டி பாப்பா இருக்கு அப்படின்னாங்க. எனக்கு உடனே என்னோட அம்மா தொப்பாதான் ஞாபகத்துக்கு வந்தது. உடனே அம்மாகிட்ட தொப்பாவ தொட்டுக் காட்டி, நான் இதுக்குள்ள இருந்தேன்னு சொல்வியே, அது மாதிரியான்னு கேட்டேன். அம்மாவும் ஆமாண்டான்னு சொன்னா.

எனக்கு ஆச்சரியமா இருக்கு! என்னை மாதிரியே அந்த பாப்பாவுமா? அதுவும் இதுக்கு முன்னாடி எங்க இருந்தது? எப்படி அக்கா தொப்பாகுள்ள இருக்கு? எப்பவோ நான் இருட்டுல இருந்தேனே! அது மாதிரிதான் இதுவுமா? இதுவும் வந்து என்ன பண்ணும்? இப்படி எனக்குள்ள நிறைய கேள்வி. கூடவே, எனக்கு என்னைப் பற்றிய கேள்வியும் ஞாபகத்துக்கு வந்துடுத்து. எனக்கு என்னைப் பற்றிய உணர்வு வந்த முதல் நாளிலிருந்து எனக்குள்ளிருந்த அதே கேள்விகள் இப்போது மறுபடியும்!

இந்தக் கேள்விகள் மனசுக்குள்ளே மறுபடியும் வந்தவுடன் எனக்கு என்னுடைய விளையாட்டு, தினம் தினம் வழக்கமா செய்யறவை இவ்வளவு ஏன், அனா, ஆவன்னா கூட கொஞ்ச நேரத்துக்கு மறந்து போயிடுச்சு. கூடவே டாக்டர் போட்ட ஊசி வலியும்!


ஆத்மாவின் பயணம் தொடரும்!

No comments:

Post a Comment