Sunday, April 28, 2019

ஒரு ஆத்மாவின் பயணம்


பாகம்-21

டிவியை ஓடவிட்டபோது அதில் வந்த நிகழ்ச்சியில் மனம் பதியவில்லை. அது முடிய இன்னும் அரைமணி நேரம் ஆகும் போலத் தெரிந்தது. உடனே அதை அதன் ஒலியை குறைத்துவிட்டு, ரேடியோவை பாட விட்டேன். முந்தைய நாள் இரவின் தொடர்ச்சி போல ஒலித்தன பாடல்கள்.

அதிலே இரண்டு திரும்பத் திரும்ப மனதில் ரீங்காரமிட்டன.

"கண் மலர்களின் அழைப்பிதழ் 
பொன் இதழ்களின் சிறப்பிதழ்
இனிவரும் இரவுகள்
இளமையின் கனவுகள்தான்
காண்போமே சேர்ந்தே நாமே"

"மூங்கினிலே பாட்டிசைக்கும்
காற்றலையை தூதுவிட்டேன்
அவள் முகவடிவை மனம் பார்த்தபின்னே
அந்த பௌர்னமியை இவன் ரசிப்பதில்லை
அவள் முகவடிவை மனம் பார்த்தபின்னே
அந்த பௌர்னமியை இவன் ஹ்ஹ ரசிப்பதில்லை

மூங்கினிலே பாட்டிசைக்கும்ம்ம்ம்ம்ம்
காற்றலையைய்ய்ய்ய்ய்ய் தூதுவிட்டேன்

சரணம் 1

இரு விழி கவிதை நான் தினசரி படித்தேன்
பொருள் அதை அறிய வழி ஏதும் இல்லை ஆஆஆஆ
இரு விழி கவிதை தினசரி படித்தேன்
பொருள் அதை அறிய வழி ஏதும் இல்லை
புதுப்புது வார்த்தை தினம் தினம் தேடி
பார்வையில் அமுதாய் அவள் வடிப்பாள் ஆஆஹாஆ
நீர் அலைப்போலவே நீல விழிக்கோலங்கள்
நெஞ்சை நீராட்டவே நெருடி தாலாட்டவே
என் கற்பனைக்கு விதை தூவினாள் ஹோய் ஹோய் ஹோய்
என் கற்பனைக்கு விதை தூவினாள்"

இந்த இரு பாடல்களும் அவளுடைய விழிகளை மீண்டும் நினைவூட்டி, மனதைப் படுத்தின.

அவற்றில் மனம் லயித்திருக்கையில் விழிகள் தன்னைப் போல டிவியில் பதிந்தன. ஓடிக்கொண்டிருந்த நிகழ்ச்சி முடிந்து, அடுத்த நிகழ்ச்சி கம்பன் விழா என்று வந்ததும் நான் உடனே ரேடியோவை அணைத்து விட்டு, டிவியினை கவனிக்க ஆரம்பித்தேன். அன்றைக்கு சுதா சேஷய்யன் சுந்தரகாண்ட நிகழ்வை விவரித்துக் கொண்டிருந்தார்.

சுயபலமறியாத ஆஞ்சநேயன் ஜாம்பவானால் அறிந்து கொண்டவுடன் சுறுசுறுப்பாகி, மகேந்திரமலை மேலேறி தன்னுடைய வாலைப் பற்றி ஒருமுறை சுளீரென்று மலையின் மீது அடித்து, சுந்தரகாண்டம் படைக்கக் கிளம்பியது முதல் சீதையை அசோகவனத்தில் கண்டது; அதன் பின் ராவணனை நேரில் சந்திப்பதற்காக அசோகவனத்தை அழித்தது, இந்திரஜித்தின் ப்ரஹ்மாஸ்திரம் மூலம் கட்டுண்டு, அதன்பின் இராவணனின் படைகளால் அவன் முன் நிறுத்தப்பட்டது, ஒரு தூதுவனாக ஸ்ரீராமனின் செய்தியை இராவணனிடம் உரைத்தது, அதைக் கேட்ட இராவணன் சினந்து, விபீஷணனின் அறிவுறுத்தலின்படி வாலில் தீ வைத்தது, வாலில் பற்றிய தீயைக் கொண்டு ஆஞ்சநேயன் இலங்கையைக் கொளுத்தியது; அதற்குப் பின் மீண்டும் சீதையை சந்தித்து, ஸ்ரீராமனுக்குச் சொல்ல வேண்டிய செய்தி யாது என்று கேட்டபோது சீதை காகாசுரனால் தனக்கு நேர்ந்த ஆபத்து, அதிலிருந்து ஸ்ரீராமன் தன்னைக் காத்த நிகழ்வைக் குறிப்பிட்டபின் இனி நான் கூறப்போகும் செய்தியையும் அவரிடம் சொல் என்று கீழ்க்காணும் நிகழ்ச்சியைக் குறிப்பிட்டாள்.

வந்து எனைக் கரம் பற்றிய வைகல்வாய்,
"இந்த, இப்பிறவிக்கு இரு மாதரைச்
சிந்தையாலும்தொடேன்" என்ற, செவ் வரம்
தந்த வார்த்தைதிருச் செவி சாற்றுவாய்.

இதற்குப் பொருள், மிதிலையை அடைந்து; என்னைத் திருமணம் செய்து கொண்டவுடனுறை காலத்தில்; இந்த அவதாரத்தில் இரண்டாவது பெண்னை மனத்தால் கூட தீ்ண்டமாட்டேன். இந்த இவ்வுறுதியைப் பெற்றுக் கொள் என்கின்ற செம்மையான வரத்தை வழங்கிய செய்தியை இராமபிரான் செவியில் மொழிக.

இதைக் கேட்டவுடன் எனக்கு ஒரே ஆச்சரியம்! ஏனென்றால், ஸ்ரீராமன் என்று சொன்னாலே, "ஒரு சொல், ஒரு பாணம், ஒரு மனைவி" என்னும் இம்மூன்றுதான் மிகவும் பிரசித்தி பெற்ற சொற்கள். அவ்வாறிருக்க, அப்படிப் பட்டவனிடமே ஏன் சீதை இவ்வாறு சொல்கிறாள்?

அப்போதுதான் எனக்கு லேசாகப் பொறி தட்டியது. ஆஹா! அவள் ஸ்ரீராமனைப் பார்த்து சொல்லவில்லை.  பெண்களின் பிரதிநிதியாக இந்த உலகத்து ஆண்களுக்கு எச்சரிக்கை விடும் விதமாகப் பேசுகிறாள்! அவள் சொல்வது சரிதான்! கற்பு நெறி தன்னை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப்போம் என்று பாரதி இன்று சொன்னதை சீதை அன்றே வேறு விதமாக சொல்லியிருக்கிறாள்.

எனக்கான ஒருத்தி எங்கோ பிறந்து வளர்ந்து காத்துக் கொண்டிருக்கையில் நான் மட்டும் என்னுடைய இஷ்டத்திற்கு இப்படி அலைவது சரியா என்று என்னுடைய மனமே என்னுடைய மனதைப் பார்த்து கேள்வி கேட்டது. இது முறையல்ல என்ற எண்ணம் வலுப்பட்டது. அவ்வாறு என்னுடைய எண்ணம் வலுப்பெற, என்னுடைய குடும்பச்சூழல், என்னுடைய  வருமானம், அப்பா அம்மாவின் எனக்கான உழைப்பு, அவர்களுடைய மானம் மரியாதை என்று வரிசையாக இத்தனை விஷயங்களும் மனசுக்குள் இருந்த காதலை புயல்காற்று மரங்களை வேரோடு சாய்த்து போல சாய்த்து விட்டது!

மனசுக்குள்ளிருந்த காதல் இப்படி சில நிமிடங்களில் பொசுக்கென வீழ்த்தப்பட்டதால் மனசு சிறிது நேரம் அதாவது மாலை வரை ஒரு மாதிரி சித்தபிரமை பிடித்த மாதிரி இருந்தது. மாலை வேளையில் அம்மா வீட்டில் ஏற்றிவைத்த விளக்கின் எண்ணெய் மற்றும் ஊதுபத்தி மணம் மனதை ஒருநிலைப்படுத்தியது.

மறுநாள் காலை வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறுமா? எனக்கு இப்போது தெரியவில்லை!

ஆத்மாவின் பயணம் தொடரும்!

No comments:

Post a Comment