Sunday, April 28, 2019

ஒரு ஆத்மாவின் பயணம்


பாகம்-13

அந்தன்னிக்கு ஏதோ ஒரு சனிக்கிழமை சாயந்திரம் 4 மணி. திடீர்னு ஏதோ ஒரு சத்தம். சட்டுனு முழிச்சுட்டேன். மெல்ல கண்ணை கசக்கிக்கிட்டு முழிச்சுப் பார்த்தேன். பாட்டி பால் காய்ச்சிட்டு இருந்தா. அப்போ யாரோ வாசல்ல வர்ற மாதிரி சத்தம் கேட்டுது. யார்னு பார்த்தா, ! மஞ்சு அத்தையும் குமுதா அத்தையும் ஏதோ பேசிட்டே வந்தாங்க. பாட்டி அவங்களை பார்த்து, “இப்பத்தான் வீட்டுக்கு வர வழி தெரிஞ்சதா?” அப்படின்னா. அதுக்கு மஞ்சு அத்தை, “இல்லை மாமி! நாங்க குடும்பத்தோட நெறைய கோவில் குளம்னு சுத்திட்டு இப்பதான் வந்தோம். அதுக்கப்புறம் நேரா இங்கதான் வரோம்அப்படின்னு சொல்லிகிட்டே பாட்டிகிட்ட ஏதோ குடுத்தா. பாட்டி பால் காய்ச்சறதைப் பார்த்துட்டு குமுதா அத்தைநாங்க சரியான நேரத்துக்குதான் வந்திருக்கோம்அப்படின்னு சொல்ல, பாட்டிரெண்டே நிமிஷம்! ரெண்டு பேரும் இப்படி உக்காருங்க, காப்பியோட வரேன்அப்படின்னு சொல்லிட்டு உள்ளே போக, நான்பாட்டீஈஈன்னு சொல்லிக்கிட்டே எழுந்து பாட்டி பின்னால ஓடப் போனேன். மஞ்சு அத்தை என்னைஇருடா! ஓடாத!” அப்படின்னு நிறுத்தினா. நான் திமிறிக்கிட்டு ஓடப் பார்த்தேன். “அட, நில்லுடா! நீ இப்ப என்னமோ நிறைய கதையெல்லாம் சொல்றியாமே! எனக்கு ஒரு கதை சொல்லேன்!” இது குமுதா அத்தை.

எனக்கு உடனே கொஞ்சம் குஷியாகிடுத்து. ரெண்டு கையையும் இடுப்பில வெச்சுகிட்டு, “என்ன கதை வேணும்?” அப்படின்னு கேட்டேன். அதுக்கு மஞ்சு அத்தை, “மருமக ஒருத்தி விரதம் இருந்தாளே! அந்த கதைய சொல்லு!” அப்படின்னா. நானும் சொல்றேன் இப்ப!

ஒரு வீட்டுல மாமியார் மருமக இருந்தாங்க. அந்த மாமியார் அப்பப்ப ஏதாவது ஒரு சாமிக்கு வேண்டிட்டு விரதம் இருப்பா. அதைப் பார்த்துட்டு, மருமகளுக்கும் விரதம் இருக்கணும்னு ஆசை வந்துதாம். மாமியார்ட்ட போயிஅம்மா, நானும் உங்கள மாதிரி விரதம் இருக்கணும்னு ஆசையா இருக்கு, எப்படி இருக்கணும்னு சொல்லித் தாங்களேன்அப்படின்னு கேட்டா.

அதுக்கு மாமியார், “வேண்டாண்டி, நீ சின்ன பொண்ணு, உன்னால முடியாது!” அப்படின்னா. அதுக்கு மருமக, “இல்லல்ல, நானும் இருப்பேன், சொல்லிக் குடுங்கஅப்படின்னு தொந்தரவு செஞ்சாளாம். மாமியாரும், “சரி, சொல்றேன். அதே மாதிரி இரு. நாளைக்கு வைகுண்ட ஏகாதசி. அதனால காலங்கார்த்தால எழுந்து குளிச்சுட்டு, பெருமாளை நினைச்சு, இன்னிக்கு நான் விரதம் இருக்கேன், நீதான் எனக்கு அனுக்ரஹம் பண்ணனும்னு வேண்டிட்டு, பெருமாள் ஸ்லோகம் எல்லாம் இது இது சொல்லு. அன்னிக்கு முழுக்க எதுவும் சாப்டக் கூடாது, தூங்கக் கூடாது. நாள் பூரா பெருமாளயே நினைச்சுண்டு இருக்கணும். சரியா?” அப்படின்னா.

மருமகளும், சரிம்மா! அப்படியே இருக்கேன் அப்படின்னு சொல்லிட்டு மாமியார் சொன்ன மாதிரி பகல் பூரா இருந்தா. ஆனா அவளுக்கு பசி தாங்கலை. இருந்தாலும் மாமியார்கிட்ட சொல்லிட்டோமேன்னு கஷ்டப்பட்டு பசியை தாங்கிண்டு இருந்தா. சாயந்திரமாச்சு, ராத்திரியாச்சு. பசி ரொம்ப அதிகமாயிடுச்சு. ராத்திரி பத்து மணிக்கு மேல மருமகளால பசி பொறுக்க முடியலை. அப்படியே மெல்ல எட்டிப் பார்த்தா! மாமியார் கண்ணை மூடி படுத்திருந்தா. சரி, மாமியார் தூங்கிட்டான்னு தீர்மானம் பண்ணிண்டு, மெல்லமா தோட்டத்துப் பக்கமா போயி, அங்க இருந்த சுரையிலை ரெண்டை பறிச்சுகிட்டு வந்து, சத்தம் போடாம சமையல்கட்டுல போயி, பானைல இருந்த பழைய சாதத்தை இலை நெறைய போட்டுகிட்டு, மேல தொங்கிண்டிருந்த உரிலேர்ந்து பானைய எடுத்து, அதுல இருந்த தயிரை ஊத்தி, தொட்டுக்க சுண்டைக்கா வத்தலை போட்டு, கிடுகிடுன்னு சாப்டுட்டு, இலைய தோட்டத்துல வீசிட்டு, உள்ள வந்து சாப்ட எடத்தை துடைச்சுட்டு, ஒண்ணுமே பண்ணாத மாதிரி தன்னோட எடத்துல வந்து படுத்துண்டு, “ம்மாஆ, ப்பாஆ! முடியலையே! காலு கெண்டை இழுக்கறதே! அம்மா, இந்த பசிய மறந்து கொஞ்சம் தூங்கணும், ஏதாவது கதை சொல்லுங்களேன்! அதை கேட்டுகிட்டே தூங்கறேன்அப்படின்னு கேட்டா!

அதுக்கு மாமியார் கண்ணைத் தெறக்காமலேயே கதை சொன்னாளாம், “சுரையெலையாம், சுண்டைக்காயாம்! பானைப் பழையதாம், உரித்தயிராம்! அள்ளிப் போட்டு தின்னவளுக்கு கெண்டை இழுக்கறதாமா? தூங்குடி, தூங்கு!”

பாட்டி இந்தக் கதையை ஏன் சொன்னா தெரியுமா? சாமியையும் மத்தவங்களையும் ஏமாத்தறதா நினைச்சுகிட்டு பொய் சொல்லி ஏமாத்தக் கூடாது! அப்படி செஞ்சா, அது தப்பு! அந்த மாதிரி பண்றது, தன்னைத் தானே ஏமாத்திக்கிறதா அர்த்தம் அப்படின்னு சொன்னா!

என்ன அத்தை? கதை நல்லாருக்கா?

(இதற்கு அந்த அத்தைகள் பதில் சொல்ல வாயெடுக்குமுன் பாட்டி காப்பியோடு வந்துவிட, இருவருடைய கவனமும் அங்கே சென்றுவிட்டது. அவர்கள் காபி குடிச்சு முடிக்கட்டும். அவங்க என்ன சொல்றாங்கன்னு கேட்கலாம்! இதற்கிடையில் ஆத்மாராமும் பாலைக் குடித்தவாறே காதைத் தொடும் முயற்சியில் இருக்கிறான். அவன் மேற்கொண்டு என்ன சொல்லப் போகிறான் என்று அப்புறமா கேட்போம்.)


ஆத்மாவின் பயணம் தொடரும்!

No comments:

Post a Comment