Saturday, May 11, 2019


ஒரு ஆத்மாவின் பயணம்


பாகம்-42

இதற்குப் பின் நான் என்னுடைய பெற்றோரைத் தேடுவதில் முனைப்பானேன். என்னுடைய தேடுதலில் எவ்வளவு ஆண்டுகள் சென்றன என்று எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால் நான் இப்போது இருப்பது ஒரு ப்ரபஞ்சத்தின் அண்ட வெளியில்! தொலைதூரத்திற்கப்பால் தெரியும் இருட்டின் முன்பு சுற்றிலும் வெளிச்சக் கீற்றுகள்! பல கோள்கள் என்னைச் சுற்றி சுழன்று சென்று கொண்டிருந்தன. இருப்பினும் என்னால் பூமியில் நிகழ்கின்ற அனைத்தையும் தெளிவாகப் பார்க்க முடிகிறது. ஒவ்வொரு மனிதர்களின் மனதிலுள்ளவைகளும் பேச்சுகளும், செயல்களும் அனைத்தும் தெளிவாகத் தெரிகின்றது. ஒவ்வொரு தனி மனிதர்களைப் பார்க்கும்போது, அவர்தம் எண்ணங்களிலிருந்து அவர்தம் திருமண வாழ்க்கையில் எவ்வாறு நடந்து கொள்ளப் போகின்றார்கள் என்பதையும் உணர முடிந்ததால் பரமாத்மா சொன்ன மாதிரியான எனக்கேற்ற பெற்றோரை நான் நிறைய தேட வேண்டியிருந்தது.

அதிக ஆண்டுகள் தேடியதால் எனக்கு சற்றே களைப்பு மேலிட்டது. பரமாத்மாவை த்யானித்தேன். “பரம்பொருளே! அடியேனுக்கு சோர்வு ஏற்பட ஆரம்பித்து விட்டது. தாங்கள் தயை கூர்ந்து எனக்கான பெற்றோரிடம் என்னைச் சேர்த்து விடுங்கள்!” என்று வேண்டிக் கொண்டேன். பரமாத்மா தீர்மானித்த நேரம் இப்போதுதான் வாய்க்கப் போகின்றது என்று என்னுடைய மனதுக்குத் தோன்றியது.

அதோ! யாரந்த இருவர்? ஏன் இவர்கள் இப்படி கோவில் கோவிலாக ஏறி இறங்குகின்றனர்? அவர்களுக்கு என்ன குறை? உடனடியாக அருகே சென்று பார்த்தேன். நான் சென்று பார்த்த நேரம் அவர்கள் நின்றிருந்தது அவர்களுடைய குலதெய்வத்தின் கோவில். அந்தக் கோவிலுக்குச் சென்று அந்த தெய்வத்தின் முன் நான் நின்றபோது, என்னுள் ஏதோ மின்னல் பாய்ந்தது போல இருந்தது. என்னவென்று பார்த்தால், முற்பிறவியில் நான் உடலை விட்டு நீங்கியபோது, ஜீவாத்மாவாக வடிவெடுத்த அந்தத் தருணத்தில் என்னிலிருந்து ஒரு பங்கு ஆத்மா என்னை விட்டுப் பிரிந்தது.

 “நீ யார்? ஏன் என்னிலிருந்து பிரிந்து செல்கிறாய்?” என்று அதனிடம் கேட்டேன். அதற்கு என்னுடைய சரிபாதி ஆத்மா சொன்னது, “நாம் இந்த உடலில் தங்கியிருந்தபோது நமக்கென்று ஒரு குலதெய்வத்தை வழிபட்டு வந்தோமல்லவா? ப்ரஹ்ம நியதிப்படி, இந்த உடலைவிட்டு நீங்கியவுடன் நாம் இரு பாகமாகப் பிரிந்து விட வேண்டும். அதில் ஒரு பங்காகிய நான் இந்தக் குலதெய்வத்தின் இருப்பிடத்தில் சென்று வசிக்க வேண்டும். அங்கே வசிக்கும் காலத்தில் நம்முடைய சந்ததியினர் இங்கே வந்து வழிபட்டு நம்மிடம் வேண்டுபவற்றை நாம் அவர்களுடைய பாவபுண்ய பலன்களுக்கு ஏற்றவாறு அவர்களுக்கு அளித்து ஆசீர்வதித்துக் கொண்டிருக்க வேண்டும்.”

என்றால் உனக்கு மோக்ஷம் கிடையாதா?”

எனக்கும் மோக்ஷம் உண்டு. இங்கே வந்து வேண்டுகின்ற நம்முடைய சந்ததியினரில் எவருக்கேனும் புத்ரபாக்யம் இல்லாதிருந்து, அவர்கள் இங்கே வந்து வேண்டிக் கொள்ளும் அந்த நாளில் நாம் அவர்களுக்கு மீண்டும் பிறக்க வேண்டும். அந்தப் பிறவியில் நாம் நம்மாலியன்ற அளவுக்கு புண்யகார்யங்களைச் செய்து பிறவாமையை அடைய உழைக்க வேண்டும். இதுவே நமக்கு அந்த பரமாத்மா விதித்திருக்கும் கடமை; இட்டிருக்கும் கட்டளை!”

இந்த உரையாடல் இப்போது எனக்கு நினைவுக்கு வந்தது! அந்த என்னிலிருந்து பிரிந்த சரிபங்கு ஆத்மாதான் அது என்பதை நான் உணர்ந்தேன்!

வந்து நின்ற அந்த தம்பதிகளைப் பார்த்ததும் எனக்குள் ஏதேதோ உணர்வுகள் உண்டாயின! இவர்கள்தான் நான் தேடிய பெற்றோர் என்பது என்னுடைய மனதுக்கும் அறிவுக்கும் புலப்பட்டது! அவர்கள் வந்து மனமுருகி தங்களுடைய ப்ரார்த்தனையை வைத்துவிட்டு தமது இல்லம் சென்றடைந்தனர்.

அதற்குப் பின் நான் சற்றும் தாமதிக்கவில்லை. என் தாயின் கருவறை நோக்கிப் பாய்ந்தோடினேன். என்னுடைய அடிவயிற்றிலிருந்து அந்த ப்ரபஞ்சமே கிழியுமளவுக்கு ஒரு ஆர்வமான கதறல் எழுந்தது!

அம்மாஆஆஆஆஆஆ!”

(விஷ்வஜித் என்கிற ஆத்மாராம் என்னும் பெயருடைய அந்த ஆத்மாவின் பயணம் இங்கே நிறைவு பெறுகிறது. இதற்கிடையில் பூவுலகில் ஒரு உலகப் போர் நிகழ்ந்து அதன் பாதிப்பால் மக்கள் இனி போரே தேவையில்லை என்ற மனநிலையில் இருப்பார்கள். போர் நிகழும் நேரத்தில் இதுவரை நம்முடன் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட அந்த ஆத்மாவின் அடுத்த பிறப்பு நிகழும். போரின் முடிவில் அதன் அந்த அடுத்த பயணத்தில் பரமாத்மா விதித்தபடி, பிறந்த ஏழாவது வருடம் ஸ்ரீகாஞ்சி மடத்தில் ஜகத்குரு ஸ்ரீநரேந்திர பரமாச்சார்ய ஸ்வாமிகள் என்ற திருப்பெயரோடு தனது கடமைகளைத் தொடரும். ஏன் இந்தப் பெயர் என்றால், “நரஎன்றால் மனிதன், “இந்திரன்என்றால் தலைவன்; அதாவது, மனிதர்களை நல்வழிப் படுத்த வந்த தலைவன் என்று பொருள். அந்த ஸ்வாமிகளின் வழிகாட்டுதலில் மக்கள் அனைவரும் நல்ல சிந்தனைகளுடன், செயல்களுடன் பரஸ்பர அன்புடன் வாழத் தொடங்குவர். அவ்வாறு அன்பும் அமைதியும் நிலவ ஆரம்பிக்கும் அந்த நொடியிலிருந்து பூவுலகில் குறைந்தது ஆயிரம் வருடங்களுக்கு மனிதர்கள் போரில் ஈடுபடாமல் ஸநாதந தர்மத்தைச் செழிக்கச் செய்வதில் முனைப்புடன் ஈடுபட்டிருப்பார்கள்.

ஓம் ஸ்ரீபரமாத்மநே நம:)


ஒரு ஆத்மாவின் பயணம் இங்கே நிறைவடைகிறது

No comments:

Post a Comment