Saturday, May 11, 2019


ஒரு ஆத்மாவின் பயணம்


பாகம்-33

வெளிவேலைகளை முடித்துக் கொண்டு, மளிகை பொருட்களை வாங்குவதற்காக வழக்கமாக வாங்கும் கடைக்குச் சென்று கொண்டிருந்தேன். செல்லும் வழியில் மனம் வீட்டில் நடந்த உரையாடல்களை அசை போட்டுக் கொண்டு வந்தது. பூமாவை நினைத்து எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எவ்வளவு அழகா சமாளிக்கறா! அவள் சொன்ன பதில்கள் மனதுக்குள் ஓடின. அப்போதுதான் பொட்டிலடித்த மாதிரி ஒரு சில உண்மைகள் சுரீரென்று உறைத்தன. அந்த உண்மைகள் புரிபட்ட அத்தருணத்தில் இதுவரை என்னுடைய மனதுக்குள் ஜனித்த நாள் முதல் என்னைத் துரத்திக் கொண்டிருந்த கேள்விகளுக்கு விடை கிடைத்த மாதிரி உணர்ந்தேன்.

அவள் சொன்ன பதில்களை மீண்டுமொரு முறை மனதுக்குள் நினைத்துப் பார்த்தேன்.

 “நானும் அப்பாவும் சாமிகிட்ட வேண்டிகிட்டோம். அவரும் ஒருநாள் தன் கிட்ட இருந்த உன்னை என்னோட வயித்துக்குள்ள வெச்சுட்டார்! அப்புறமா நீ எங்களுக்குப் பொறந்தே! அதுமாதிரிதான் அந்த அக்காவும் வேண்டிகிட்டா, சாமியும் அவளுக்குப் புடிச்சமாதிரி ஒரு பாப்பாவை அக்காவுக்குக் கொடுத்திருக்கார்!”

 “அப்படின்னா, அதுக்கு முன்னாடி நாங்கல்லாம் சாமிகிட்டதான் இருந்தோமா?”

 “ஆமாண்டா கண்ணு!”

 “அப்படின்னா நாங்க என்ன செய்யப் போறோம்? எதுக்காக உங்ககிட்ட எங்களை சாமி குடுத்திருக்கார்?” – இது மகன்!

 “நீங்க இப்படி எங்ககிட்ட பேசறதுக்கு, நீங்க விளையாடறதுக்கு, நல்லா படிக்கறதுக்கு, படிச்சு பெரிய ஆளா ஆகறதுக்கு இதுக்கெல்லாம்தான்!”

 “இதெல்லாம் நாங்க எதுக்காக செய்யணும்? பெரிய ஆளா ஆகி என்ன பண்ணப் போறோம்?” – அடுத்த கேள்வி மகனிடமிருந்து!

 “அதெல்லாம் இப்ப உன்னோட அப்பா வேலைக்குப் போற அளவுக்கு நீங்கல்லாம் வளர்ந்தவாட்டி புரியும்! இப்ப ரெண்டு பேரும் போய் விளையாடுங்க!”




என்னுடைய முதல் கேள்வி – “நான் யார்?”
அதற்கான விடை – “நீ ஒரு ஜீவாத்மா!”
என்னுடைய அடுத்த கேள்வி -  “நான் எப்படி இங்கே வந்தேன்?”
அதற்கான விடை என்னுடைய பூமாவின் பதிலிலிருந்தது! – (அவரும் ஒருநாள் தன் கிட்ட இருந்த உன்னை என்னோட வயித்துக்குள்ள வெச்சுட்டார்!) – உண்மைதானே! பரமாத்மாவில் ஒரு திவலையாக இருந்த ஜீவாத்மாவாகிய என்னை என்னுடைய அம்மாவின் கருவறைக்குள் அனுப்பி வைத்தது அவர்தானே!?
என்னுடைய மூன்றாவது கேள்வி – “இதற்கு முன் எங்கே இருந்தேன்?”
அதற்கான விடைநான் இருந்தது பரமாத்மாவிற்குள்!

இம்மூன்று கேள்விகளைத் தொடர்ந்து பின்னாளில் சில கேள்விகள் வந்தன அல்லவா? அவற்றுள் ஒன்று, “எதற்காக இங்கே வந்தேன்?”

இதற்கு விடை என்னவாக இருக்கும்? நான் இதற்கு முன் பல பிறவிகள் எடுத்து, அப்பிறவிகளுள் என்னால் செய்யப்பட்ட வினைகளுக்கேற்ப நல்ல, தீய பலன்களைநான்என்று அறியப்பட்ட இந்த ஜீவாத்மா அனுபவித்தாக வேண்டும்! அதற்காக பல பிறவிகளை மீண்டும் மீண்டும் எடுக்க வேண்டும்! அப்பிறவிகளிலும் என்னால் செய்யப்பட்ட வினைகளுக்கேற்ப நல்ல, தீய பலன்களைநான்என்று அறியப்பட்ட இந்த ஜீவாத்மா அனுபவித்தாக வேண்டும்! இது ஒரு சக்கரம்! இச்சக்கரம் ஓடிக்கொண்டே இருக்கும்! இதன் ஓட்டம் எப்போது நிற்கும்? எந்தப் பிறவிக்குப் பிறகு நிற்கும்? இந்த இரு கேள்விகளுக்கு மட்டும் விடை உடனடியாகக் கிடைக்காது என்பது மட்டும் புரிந்தது.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, எனக்கு விடைகள் கிடைத்த விதம் எனக்கு மிகவும் வியப்பளித்தது! அவள் சொன்ன விடைகளில் இருந்த உண்மை ஏற்கெனவே வேதங்கள், உபநிஷத்துகள், ஸ்லோகங்களில் எல்லாம் விரவிக் கிடக்கின்றன. ஆனால் அவ்வுண்மையை உணரும் தன்மை ஏன் எனக்கு அப்போது கிடைக்கவில்லை? ஒருவேளை அவையெல்லாம் மிகவும் உயர்ந்த விஷயங்கள் என்பதால் அவை மீதான மரியாதை கலந்த பயம் அவ்வுண்மையை உடனடியாக உணரவிடாமல் செய்து விட்டதா? அப்போதுதான் நான்கற்க கசடறஎன்ற விஷயத்தையே கசடற கற்கத் தவறிய உண்மையும் புலப்பட்டது! இந்த உண்மை என்னை மிகவும் சுடுகிறது! எந்த ஒரு விஷயத்தையும் கசடற கற்கத் தவறிய என்னுடைய பொறுப்பின்மையை நினைத்தபோது, என்னை நினைத்து எனக்கே மிகவும் அவமானமாக இருந்தது. இருந்தாலும், அந்தக் கடவுள் பூமா உருவில் எனக்கு உண்மையை நான் உணரவேண்டிய தருணத்தில் உணர்த்தியதாகவே கருதினேன்.


அவள் மூலம் உணர்ந்த விதம் எனக்கு ஒரு பழைய நிகழ்வை நினைவூட்டியது. ஒருமுறை பள்ளி முழு ஆண்டுத் தேர்வுக்குப் பிந்தைய விடுமுறையில் அவள் குழந்தைகளுடன் தன்னுடைய பிறந்த வீட்டிற்குச் சென்றிருந்தாள். அவள் இல்லாத காரணத்தால் வெளியில் உணவகத்தில் சாப்பிட வேண்டிய நிலை. ஒருநாள் அவ்வாறு என்னுடைய அலுவலகத்திற்கு அருகிலிருந்த மெஸ்ஸுக்கு காலை டிஃபன் சாப்பிடப் போயிருந்தேன். நான் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, எனக்கு முன்பாக உணவருந்தி முடித்த ஒருவர் கைகளை கழுவிக் கொண்டு, கல்லாவிற்கருகில் சென்று, சாப்பிட்டதற்குப் பணம் கொடுத்தபின்பு, சட்டைப் பையிலிருந்து ஒரு வெண்குழலை எடுத்து உதட்டில் பொருத்திக் கொண்டு கல்லாவிலிருந்தவரிடம் ஒரு கையை உதறி உதறிக் காட்டினார். அதாவது, அவருக்கு வெண்குழலைப் பற்ற வைக்க தீப்பெட்டி வேண்டுமாம்! அவர் என்ன கேட்கிறார் என்பதைப் புரிந்து கொண்டவர், “நெருப்புதானே? அதோ அங்க வெளில தொங்குது பாருங்க!” என்றார்! நான் உட்பட அவருடைய பதிலைக் கேட்ட அனைவருக்கும் ஒரே ஆச்சரியம்! இருக்காதா பின்னே? நெருப்பு எங்கேயாவது தொங்குமா! அவர் சுட்டிக் காட்டிய திசையில் விழிகள் சென்றன; மேலும் வியப்பால் விழிகள் விரிந்தன. ஆம்! அங்கே ஒரு சிறிய தாம்புக் கயிறு ஒரு மீட்டர் அளவுக்கு தொங்கிக் கொண்டிருக்க, அதன் நுனியில் கடைக்காரர் சொன்ன மாதிரி நெருப்பு தொங்கிக் கொண்டிருந்தது!

நான் இந்நிகழ்வுக்கும் முன் எவ்வளவோ தமிழ்ச் செய்யுட்களை, புதுக்கவிதைகளை படித்திருக்கிறேன். அவற்றிலிருந்த சொல்லாட்சியைப் பார்த்து பலமுறை வியந்திருக்கிறேன், “இந்தக் கவிஞர்களால் மட்டும் எப்படி இந்த அளவுக்குக் கற்பனை செய்ய முடிகிறது? இதற்காக நிறைய நூல்களைப் படிப்பார்களோ?” என்று. சில திரைப்படப் பாடல்களிலும் வித்தியாசமான கற்பனைகளைப் பார்த்திருக்கிறேன், “ஆகாயம் அண்ணாந்து பார்த்தது, பாதாளம் குனிந்து பார்த்ததுஎன்று. இப்படிப் பட்ட கற்பனைகளெல்லாம் கவிஞர்களுக்கே சாத்தியம் என்று இதுநாள் வரை நான் எண்ணியிருந்த எண்ணம் இன்று தவிடுபொடியானது! இப்படிப்பட்ட கற்பனைகள் படிக்காத பாமரர்களுக்கும் சாத்தியம் என்பதை கண்கூடாகப் பார்த்தேன்.

இந்நிகழ்வின் மூலம் நல்ல, சுவையான செய்திகள் எப்போது வேண்டுமானாலும், எங்கிருந்தும், எவரிடமிருந்தும் கிடைக்கும் என்பதை உணர்ந்தேன். நாம் வாழும் ஒவ்வொரு நொடியிலும் நாம் கற்றுக் கொள்ள ஏதாவது ஒரு விஷயம் இருக்கும் என்ற உண்மையையும் நான் உணர்ந்தேன். எனவே, என்னுள் எழுகின்ற கேள்விகளுக்கு உடனடியாக விடை கிடைக்காவிட்டாலும் உரிய தருணத்தில் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை என்னுள் உருவானது.

இதுநாள் வரை என்னுள்ளிருந்த மூன்று கேள்விகளுக்கு விடை கிடைத்து விட்டது. இனி இவற்றிலிருந்து தோன்றும் வினாக்களுக்கு விடை தேட வேண்டும்! பார்க்கலாம், எப்போது, எங்கிருந்து, எவர் மூலம் விடைகள் வரப் போகின்றன என்று!


ஆத்மாவின் பயணம் தொடரும்!

No comments:

Post a Comment