Saturday, May 11, 2019


ஒரு ஆத்மாவின் பயணம்


பாகம்-29

திருமண நாளன்று இரவு நல்ல விருந்து! பரிமாறிய உணவு வகைகள் அனைத்துமே சிறப்பாக இருந்தன. அனைவருக்கும் த்ருப்தியாக இருந்தது. அவர்கள் அனைவரும் அதே குஷியில் எங்களிருவருக்கும் அன்றிரவே சாந்தி முகூர்த்தம் ஏற்பாடு செய்திருந்தனர். ஆளாளுக்கு கிண்டல், கேலி! தனிப்பட்ட முறையில் கிட்டே வந்தும், சபையில் பொதுவாகவும் கிண்டல் பேசி மகிழ்ந்தனர்.

என்னுடைய மனமோ, வேறுவிதமாக சிந்தித்துக் கொண்டிருந்தது. சாந்தி முகூர்த்தம்! இந்த சொற்கள்தான் எவ்வளவு அர்த்தங்களைத் தம்முள் பொதிந்து வைத்துக் கொண்டிருக்கின்றன! சாந்தி என்றால் அமைதி! ஒருவர் தனது வாழ்வில், தொழிலில், வீட்டில் ஏதாவது முக்கியமான முடிவெடுக்க வேண்டுமெனில் அறிவின் துணை அவசியம்! அறிவை செயல்பட வைக்க வேண்டுமெனில், மனதுக்கு அமைதி அவசியம்! உணர்ச்சிகளுக்கு ஆட்பட்ட மனதால் அறிவின் துணைகொண்டு சிந்தித்து முடிவெடுக்க இயலாது! அவ்வாறு எடுத்தால், அது எதிர்மறை விளைவுகளையே தரும்! சில சமயம், விபரீதங்களில் கூட முடியும் வாய்ப்புள்ளது. ஆதலால், மனதுக்கு சாந்தி அவசியம்.

திருமணமாகி, வாழ்க்கையின் அடுத்த கட்டத்தில் அடியெடுத்து வைக்கும் இருமனங்களில் வாலிப ஆட்சியின் காரணமாக பல்வேறு எதிர்பார்ப்புகள், கற்பனைகள், ஐயங்கள் இருக்கும். இதற்கான விடைகள் மற்றும் தீர்வுகளை பிறரால் அளிக்க முடியாது. இவ்விருவரும் இயல்பான நடைமுறையில் அவர்களாகவே கற்றுத் தேர்ந்து, விடைகளையும் தீர்வுகளையும் அவர்களுக்கு அவர்களே அளிக்க வேண்டும்.

திருமண வாழ்வின் துவக்கத்தில் முதன்மையான தேடல், உடனடியாக அறிந்து கொள்ள வேண்டுமென்ற அதீத ஆவல் இரண்டுமே உடற்கூடல் குறித்து இருப்பதில் வியப்பேதுமில்லை! ஆனால், அதற்கு முன்பாக மனக்கூடல் என்பது மிகவும் அவசியம். மனக்கூடல் என்பது என்ன? என்னுடைய விருப்பங்கள், ரசனைகள் பற்றி அவள் அறிய வேண்டும்; அது போலவே அவளுடைய விருப்பங்கள், ரசனைகள் பற்றி நானும் அறிய வேண்டும். கணவன் மனைவி இருவரும் பரஸ்பரம் மற்றவருடைய ஈடுபாடுகளை மதிக்க வேண்டும். அவ்வாறு மதிக்கின்ற இந்தப் புள்ளியில்தான் மனக்கூடல் என்பது நிகழும்.

இவ்வாறெல்லாம் நான் சிந்தித்துக் கொண்டிருந்தபோது, நாங்கள் இருவரும் தனியறையில் விடப்பட்ட நேரத்தின் துவக்கம். இந்த நேரத்தில் என்னுடைய மனதுக்குள்பருவத்தே பயிர் செய்!” என்ற வாக்கியம் நினைவுக்கு வந்தது. நினைவுக்கு வந்த நொடியில் இதன் தாத்பர்யமும் புரிந்தது.

விளையாட வேண்டிய வயதில் விளையாடி, படிக்க வேண்டிய வயதில் படித்து, வேலைக்குப் போக வேண்டிய வயதில் பணியாற்றி, வாழ்க்கையின் அடுத்தடுத்த கட்டங்களில் சந்திக்க வேண்டியவற்றை உரிய காலங்களில் உரிய முறையில் சந்திக்க வேண்டும். எனக்கு இந்த நேரத்தில் ஒரு மரத்தினுடைய விதையின் வாழ்க்கை நினைவுக்கு வந்தது. அது உரிய நேரத்தில் தன்னுடைய தலையால் தரைமுட்டி, நிலம் திறந்து வானம் பார்த்து, அந்த வானம் பொழியும் நீரையுண்டு, நிலத்தின் வளத்தால் தன்னை வளர்த்துக் கொண்டு, உரிய நேரத்தில் துளிர்விட்டு, இலையாக வளர்ந்து, செடியாகி, சிறுமரமாகிப் பின்பு வளர்ந்த மரமாகி, பூக்கும் பருவத்தில் மொட்டு விட்டு (அதாவது அம்மரம் தனது வாலிபப் பருவமெய்தி), பூத்து (இல்வாழ்க்கைக்குத் தயாராகி), காய்விட்டு, பழுத்து கனியாகிஇவையனைத்தும் உரிய நேரத்தில் மட்டுமே நிகழ்கின்றன. அதுபோலத்தானே மனித வாழ்க்கையும் இருக்க வேண்டும்? எங்களிருவருக்கும் எப்படி அமையப் போகின்றது என்பதை எங்களுடைய நடத்தையும் காலமும்தான் முடிவு செய்ய வேண்டும்.

நான் மேலே குறிப்பிட்ட மனக்கூடல் முதன்முறையாக என் வாழ்வில் நிகழவுள்ளது! இந்தமுதன்முறையாகஎன்பது குறித்து நான் புரிந்து கொண்டதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். அவசியம் பகிர்வேன்! தொடர்ந்து என்னுடன் பயணியுங்கள்!

ஆத்மாவின் பயணம் தொடரும்!

No comments:

Post a Comment