Saturday, May 11, 2019


ஒரு ஆத்மாவின் பயணம்


பாகம்-38

ஆமாம்! அதுதான்! அதேதான்! என்னுடைய கடைசி நொடிகள் ஆரம்பமாயிடுச்சு! இந்த நேரத்துல நான் அதை ஏற்றுக் கொண்டாக வேண்டும்! இந்த என்னோட கடைசி நிமிஷங்களில் நான் செய்ய வேண்டியது ஒன்று மட்டுமே! இறைவனின் நாமத்தை அவனை நினைத்தவாறே ஜபிக்க வேண்டும். இந்தக் கடைசி நொடிகளில் என்னுடைய ப்ரார்த்தனை ஒன்று மட்டுமே! “நான் உன்னை நேரில் காண வேண்டும். பிறவாமையென்னும் வரம் கேட்க வேண்டும். இல்லை, நான் மீண்டும் பிறந்துதான் ஆக வேண்டுமென்றால், என்னை ஒரு நல்ல குடும்பத்தில் நல்ல மனிதர்களிடையில் பிறக்க வை. அந்தப் பிறவியிலும் என்னை ஒரு நல்ல மனிதனாக வாழ வை. என்னைப் பாவம் செய்ய வைக்காதே! அதற்குப் பிறகாவது பிறவாமல் என்னை உன்னுடன் இணைத்துக் கொள்!” என்பதே. அதையே நான் இப்போது செய்து கொண்டிருக்கிறேன்.

எனக்கென்னவோ இதுவும் ஒருவகையில் பிறப்பு போன்றே தோன்றுகிறது. அன்று நான் கருவறையிலிருந்து வெளியேற முயற்சிப்பது போல இன்று என்னுடைய ஆன்மா இந்த உடலென்னும் அறையிலிருந்து வெளியேற முயற்சிக்கிறது! அவ்வாறு அன்று நான் முயற்சித்தபோது உடலோடு வெளியேறினேன். அந்த முயற்சியானது என்னுடைய அம்மாவுக்கு பெரும் வலியைக் கொடுத்தது. அந்த வலி எப்படி இருக்கும் என்பதை இப்போது என்னுடைய ஆன்மா வெளியேற முயற்சிக்கும்போது என்னுடைய உடலால் உணர முடிகிறது. துவக்கத்தில் வலியாக உணரப்பட்டது, ப்ரசவத்திற்குப் பின் உடல் மிகவும் ஆயாசமாக இருப்பது போல இப்போது எனது உடலும் அதீத ஆயாசமாக உள்ளது.

கால்களை அசைத்துப் பார்த்தேன். அவை அசையவில்லை. பிறந்தவுடன் நான் வயிற்றுக்குள் சுலபமாக நீந்தியது போல இப்போது முடியவில்லை என்று சொன்னேன் அல்லவா? அது போலவே இப்போது என் கால்களை அசைக்க முடியவில்லை; உடலும் அசையவில்லை. மெல்ல மெல்ல உடலின் ஒவ்வொரு பகுதிகளாக தத்தமது இயக்கங்களை நிறுத்தி வருவதை உணர்ந்தேன். முதலில் கால் விரல்கள்; அதன் பின் பாதம்; அதன்பின் முழங்கால் வரை; அதற்குப் பிறகு தொடையில் தொடங்கி இடுப்பு வரை; பிறகு வயிற்றுப் பகுதி வரை அனைத்தும் அடங்கின. எனது கைகள் செயலிழக்கும் முன்பே நான் அவற்றை இறைவனை நோக்கிக் கூப்பிய பாவனையில் மார்புக்கு மேலாக வைத்துக் கொண்டேன். அதன்பின் அவையும் செயலிழந்தன. அதற்குப் பின் நெஞ்சுக்கூடு தனது இயக்கத்தை நிறுத்தியது. இதயமும் மூளையும் மட்டுமே செயலில் இருந்தன. நெஞ்சுக் கூட்டின் இயக்கம் நின்றவுடன் சுவாசம் தடைபட ஆரம்பித்தது. மூளைக்கு காற்று போவது நிற்கப் போவதை உணர்ந்தேன். மூளை தனது இயக்கத்தை நிறுத்துமுன்பு இதயத்திற்குத் தனது இறுதி உத்தரவை பிறப்பித்தது, நீயும் உன் இயக்கத்தை நிறுத்திக் கொள் என்று. அந்த உத்தரவை இதயம் உடனே செயல்படுத்திய அந்த நொடியில், என்னுடைய ஆன்மாவானது எனது உடலை விட்டு நீங்கியது!

இதுவரைவிஷ்வஜித் என்கிற ஆத்மாராம்என்ற பெயர் கொண்ட அந்த உடலுக்குள் இருந்து கொண்டு இந்த ஜீவாத்மாவாகிய ஆன்மா உங்களுடன் பேசியது. இனியும் கொஞ்ச காலம் பேசும். இது ஒருபுறமிருக்கட்டும். என்னுடைய அந்த இறுதி நொடிகள் பற்றி நான் இன்னும் முழுசா சொல்லி முடிக்கலை.

நான் உடலுக்குள் இருந்தபோது பலமுறை கனவில் என்னுடைய உடலைவிட்டு எங்கோ தரையைத் தொடாமல் அந்தரத்தில் மிதந்தவாறு பயணிப்பது போல கனவு கண்டிருக்கிறேன். அவ்வாறு பயணித்து விட்டு மீண்டும் உடலுக்குள் செல்ல முயற்சிக்கும் போது அது கடினமாக உணரும் வேளையில் சட்டென்று கனவு கலையும். கனவிலே கிடைத்த அனுபவம் இப்போது எனக்கு நிஜத்தில்! அம்மாவின் வயிற்றுக்குள் இருந்தபோது என்னால் சுலபமாக நீந்தி வளைய வந்தது போல இப்போது என்னை உணர்கிறேன். என்னால் நான் விரும்பிய வேகத்தில் பயணிக்க முடிகிறது.

இனி என்னால் அந்த உடலுக்குள் மீண்டும் செல்ல முடியாது என்பது நிஜம்! இனி அடுத்து என்ன? நான் முடிவற்ற இருளில் பயணித்துக் கொண்டிருந்தேன். அவ்வப்போது ஒளிக்கீற்றுகள் என்னைக் கடந்து போய்க் கொண்டிருந்தன. பசி, தாகம் எதுவும் தெரியவில்லை. இருப்பினும் நான் பயணித்த வழியில் அங்கங்கே சோறும் நீரும் இருந்தன. நான் பயணிக்கும்போது இருவர் என்னுடன் ஏதோ பாதுகாப்பு போல வந்தனர். இந்த சோறும் நீரும் கண்ணில் படும்போதெல்லாம், “ம்ம்ம்! இதை அருந்திவிட்டு பிறகு தொடரலாம்!” என்றனர். அவர்கள் சொன்னதை நான் எந்தவித மறுப்பும் சொல்லாமல் செய்தேன்.

இவ்வாறு நான் எவ்வளவு நேரம்/நாள் பயணித்தேன் என்று தெரியவில்லை. ஒரு பெரிய அரண்மனை போலிருந்த இடத்தை அடைந்தேன். கூட வந்தவர்கள், “ம்ம்ம்! இந்த வாசல் வழியாக வா!” என்று சொல்லி அழைத்துச் சென்று ஒருவர் முன்னால் நிறுத்தினர்.

யாரந்த நபர்? பார்க்க மிகவும் கம்பீரமாக இருந்தார். இதற்கு முன் இவரைப் பார்த்ததில்லை. இருந்தாலும் முன்பே பலமுறை பார்த்த மாதிரியும் இருக்கு. ஒருவேளை என்னுடைய முற்பிறவிகளில் பார்த்திருப்பேனோ? ஹ்ம்ம்! சற்றே குழப்பம்!

முதல்ல என்னோட குழப்பம் தீரட்டும், உங்ககிட்ட அப்புறமா பேசறேன்!


ஆத்மாவின் பயணம் தொடரும்!

No comments:

Post a Comment