#கனவிலே_எழுதி_மடித்த_கவிதை
எழுதிய நாள்: 07-10-2021
சில தினங்களுக்கு முன்பு உரைத்தவாறு, கீழ்க்காணும் ஹைக்கூ வகைக் கவிதைகள் போட்டியில் வெல்லாத காரணத்தால் இங்கே வெளியாகிறது!
வள்ளியும் சேனையும் அவனுக்கு
அவை கிழங்கும் தெய்வமும் எங்களுக்கு!
குகனே முருகனே ஹரோஹரா!
நாடாள ஆசை என்றேன்
போடா பிய்ந்த செருப்பே என்றனர்
நான் ராமனின் செருப்பல்லவே!
பலமுறை முந்திச் சென்றாலும்
மீண்டும் மீண்டும் வெல்லும் வேட்கை
அந்நிலைக் கடிகார முட்களுக்கு!
சுற்றிச் சுற்றி வந்தாலும்
வெளியே செல்லும் வழியறியாது மீண்டும்
சுற்றும் கடிகார முட்கள்
உன்னைச் சுமந்தே ஊர்திரிந்தாலும்
என்னை வைப்பது வீட்டின் வெளியே!
என்றே புலம்பும் காலணிகள்!
என்னைப் பன்முறை தேய்த்து
வளர்த்தும் எந்தன் கறைகள் நீங்கவில்லை!
என்றே புலம்புது முழுநிலவு!
உந்தன் வருகையெனும் செய்தியை
முந்தித் தருகிறது காற்றிலே மிதந்து
வரும் உந்தன் வாசம்!
உன்னை நினைந்தேன் கவியெழுத
எண்ணிப் பார்த்தும் இயலவில்லை உன்னைப் படைத்தவன் ஆணவச் சிரிப்பு
என்னிலும் பெருங்கவி யாரிங்கென்று!
உரக்கக் கூவி ஊரெழுப்பிய கோழி
உறக்கம் கொள்ளப் போகிறது அந்த
உறக்கம் கலைந்தவர்கள் வயிற்றில்!
பூமுகர்ந்து பூவிலிருந்து முகந்து
நாவில் நறவதனை நாளும் நொடியும்
நமக்காய்த் தேக்கித்தரும் பூநக்கி! (தேனீ)
கவிதைகள் எழுதியது : கனவுப் புலவன்.
இயற்பெயர் : P Jayaraman
No comments:
Post a Comment